கோவையில் மட்டுமே அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிப்பு - பத்திரிக்கைச் செய்தி - நாள்:23.09.2021

கோவையில் மட்டுமே அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதர கட்டுப்பாடுகள் தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


ந.க.எண்:8106/2021/பேமே
நாள்:23.09.2021
பத்திரிக்கைச் செய்தி


கொரோனா நோய் (COVID-19) தொற்றினை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசால் அரசாணை நிலை எண்.552 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள்:11.09.2021 -ன்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு 31.10.2021 வரை நீட்டிக்கப்பட்டு தமிழக அரசால் 12.09.2021 மற்றும் 19.09.2021 ஆகிய இரண்டு நாட்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.


அவற்றில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 2.5 இலட்சம் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது. நாளது வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த சுமார் 24.5இலட்சம் (80 விழுக்காடுக்கு மேல்) பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பிரத்யேகமாக ஞாயிற்றுகிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிகொள்ளப்படுகிறது. மேலும் தமிழக அரசால் அறிக்கப்பட்டுள்ள அனைத்து தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் கீழ்கண்ட நெறிமுறைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்.


1. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வனாகங்கள் (Malls), திரையரங்குகள் (Theatres), டாஸ்மாக், மார்க்கெட்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும்.


2. மேலும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மேற்படி கடை மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை மேற்படி நிறுவனம்/ கடைகளின் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்.


3. திருமண மண்டபங்கள் மற்றும் விருந்து மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள்/ திருமண நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திருமண மண்டபங்கள் மற்றும் விருந்து மண்டபங்களின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் நிகழ்ச்சிகளின் போ னைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை மண்டபங்களின் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்.


4. கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுவர்.


5. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கேரள மாநில மாணவர்கள் தினம் பள்ளிக்கு வந்து செல்ல (Day Scholars) அனுமதியில்லை. அம்மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், விடுதிகளில் தங்கி பயிலும் கேரள மாணவர்களுக்கு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கோவிட்யின்மை எனில் மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்கப்படுவர். கேரள மாநிலத்திலிருந்து வரும் மாணவர்கள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கோவிட் நோய்த் தொற்று அறிகுறி ஏதேனும் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவித்து மருத்துவ ஆலோசனை/சிகிச்சை பெறவும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படுகிறது.


6. மொத்த விற்பனை மார்கெட்டுகளில் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மொத்த விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை.


7. பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர்/ பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் உறுதிபடுத்தவேண்டும்.


கொரோனா தொடர்பாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களை கண்காணிக்கும் பொருட்டு சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல் ஏதும் கண்டறியப்படுமெனில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர் விதிமீறல்கள் கண்டறிப்படும் நிறுவனம்/ கடைகளுக்கு அபராதம் விதித்து ஏழு நாட்கள் வரை மூடப்படும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மாவட்ட ஆட்சித்தலைவர் என டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


வெளியீடு : செய்தி மக்கள் தொடர்புத்துறை, கோயம்புத்தூர்.
Post a Comment (0)
Previous Post Next Post