சென்னை:'தமிழகத்தில் இருந்து, இந்திய வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையம் நடத்தும், மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்கலாம்' என, தலைமை செயலர் இறையன்பு தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சார்பில், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் நடத்தப்படுகிறது.
செப்., 26 முதல் நவ., 28 வரை, மத்திய தேர்வாணையம் சார்பில் நடந்த, இந்திய வனப்பணி முதன்மை தேர்வுக்கு, இந்த மையத்தில் ஒன்பது பேர் தங்கி படித்தனர்.
அவர்களில், மூன்று பெண்கள் உட்பட, ஐந்து பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
இந்திய வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு, இப்பயிற்சி மையம் சார்பில், மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி மையம் வழியே தேர்ச்சி பெற்றவர்களுடன், வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த பிற ஆர்வலர்களும், இம்மையத்தில், ஜன., 2, 3ல் நடக்கும், மாதிரி ஆளுமை தேர்வில் பங்கு பெறலாம்.
ஆர்வமுள்ளோர் தங்கள் விருப்பத்தை, aicscc.gov@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, நாளைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை, www.civilserviceindia.com என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
