படிக்கும் போது அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன்: முதல்வர் ஸ்டாலின்

படிக்கும் போது அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன்: முதல்வர் ஸ்டாலின்

படிக்கும் போது அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், நாம் படித்த சேத்துப்பட்டு ஸ்கூலுக்கு நாளைக்குப் போக போகிறோம் என்று நேற்று இரவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.

இன்னும் சொல்லவேண்டுமென்றால், அந்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. சாதாரணமாக நான் தூங்குவதே 2 மணி 3 மணிக்குதான். அந்த தூக்கம் கூட சுத்தமாக இல்லாமல், படித்த பள்ளிக்கு போகப் போகிறோமே என்கிற அந்த உணர்வோடு நான் இரவு முழுவதையும் கழித்தேன். ஏனென்றால், மாணவர் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளி காலம்தான் அதை மகிழ்ச்சியோடு நாம் கழித்திருக்கிறோம். அத்தகைய பள்ளிக்கூடத்தில் எப்படி எல்லாம் துள்ளி திரிந்தோம், அதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன். இந்தப் பள்ளியில் நான் படிக்கிறபோது நம்முடைய தமிழ் ஆசிரியர் ஜெயராமன் சொன்னது போல, என்னுடைய அப்பா அன்றைக்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அண்ணா மறைவிற்குப் பிறகுதான் முதலமைச்சராக ஆனார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரே சொன்னார், நான் எந்த பந்தாவும் இல்லாமல், ஒரு அமைச்சருடைய மகனாக நான் நடக்கவில்லை. நான் மட்டுமல்ல, என்னுடைய தலைவர் என்னுடைய தந்தையும் அப்படி நடப்பதை விரும்ப மாட்டார். இதெல்லாம் என் கூட படித்தவர்களுக்கு தெரியும். ஆசிரியருக்கே தெரிந்திருக்கிறது.

அப்படி என்றால், மாணவர்களுக்கு நிச்சயமாக தெரியும். நான் அமைச்சருடைய மகனாக இருந்த நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு நான் பேருந்தில் தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். அதேமாதிரி தான் இப்போதும் இங்கே நான் முதல்வராக வரவில்லை என்று சொன்னேன். உங்கள் நண்பராகத் தான் வந்திருக்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், பாதுகாவலர்கள் எல்லாம் மட்டும் இல்லையென்றால், அதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்றால், நிச்சயமாக நான் பேருந்திலேயோ சைக்கிளிலோ இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன்.

ஆனால், பாதுகாவலர்கள் விட மாட்டார்கள். அது உங்களுக்கு தெரியும். ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம்.

இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் 19-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னதாகவே நான் படித்த பள்ளியிலே, எனது பள்ளியிலே முன்னெடுப்பாக நடந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். தமிழகத்தில், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய இலட்சியம்.

அது உங்களுக்குத் தெரியும். இந்த ஆட்சி பொறுப்பேற்று, முதல்வராகப் பொறுப்பேற்று, எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், எத்தனையோ பொது நிகழ்ச்சிகள், எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள் என்று எத்தனை நிகழ்ச்சிக்கு போனாலும், இந்த நிகழ்ச்சிக்கு எந்த நிகழ்ச்சியும் ஈடாகாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அதுதான் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது என்பதையும் பெருமையோடு சுட்டிக்காட்டி, உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Post a Comment (0)
Previous Post Next Post