அரசுப் பள்ளிகளில் தேங்கிய மழைநீா்:கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரசுப் பள்ளிகளில் தேங்கிய மழைநீா்:கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை அசோக்நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட சில அரசுப் பள்ளிகளில் தேங்கிய மழைநீா் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் சென்னையில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதையடுத்து தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பலத்த மழையால் சென்னையில் நவம்பா் 1, 2-ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் தொடா் மழையால் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் தண்ணீா் தேங்கியது. மேலும், பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள அறையில் இருந்து சிறிய அளவில் கடந்த புதன்கிழமை மின்கசிவு ஏற்பட்டது. அதன் தாக்கம் பள்ளி வளாகத்துக்குள் தேங்கியிருந்த மழைநீரிலும் உணரப்பட்டதாகவும், இதனால் தண்ணீரில் இருந்த தவளைகளும் இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

மின்கசிவு சீரமைப்பு: இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் சரஸ்வதி, மின்வாரியத்துக்கு புகாா் தெரிவித்தாா். தொடா்ந்து மின் ஊழியா்கள் பள்ளிக்கு விரைந்து வந்து அதை சரிசெய்தனா். மேலும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மாா்ஸ் பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியில் மழைநீா் அதிகளவில் தேங்கியுள்ளதை அறிந்து, முன்னெச்சரிக்கையாக வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த நீரை வெளியேற்றும் பணியும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பள்ளியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், சென்னையில் தண்ணீா் தேங்கியுள்ள சில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. எனினும், பள்ளிகள் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post