நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம்: மறுப்பு தெரிவித்து என்டிஏ விளக்கம்

கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது.

கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளைக் களைய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் நீட் தேர்வு மையக் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் எக்ஸாம் நேற்று முன்தினம் (ஜூலை 17) நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்த்துவிட்டு எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்தனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், "தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து பரிசோதனை நடத்தினார். பிராவில் மெட்டல் ஹூக் இருந்ததால் பீப் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாடையை கழட்டி வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அந்த அதிகாரி, தேர்வு முக்கியமா உன்னுடைய உள்ளாடை முக்கியமா என கேட்டுள்ளார். தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல் மாணவி ஒரு ஓரமாக நின்று அழுவதைக் கண்ட மற்றொரு அதிகாரி அருகில் சென்று விஷயங்களைக் கேட்டுள்ளார். நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் அந்த மாணவியின் அம்மாவின் போன் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து அம்மாவிடம் துப்பட்டாவைக் கொண்டுவரும்படி சொன்னார்.

பின்னர் காரில் போகும்போது தேர்வு எப்படி எழுதினாய் என அவரின் தாய் கேட்டபோது வெடித்து அழுத மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் உலோகம் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைக் காரணம் காட்டி மாணவியின் உள்ளாடையை அவிழ்க்க வைத்துளனர். இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், தெரிந்த கேள்விகளுக்குக்கூட விடை எழுத முடியாமல் திரும்பி வந்ததாகவும் மாணவி கூறினார். வேறு மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறினார்" என பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிக்க | சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்



இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு தேசியத் தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ தெரிவித்துள்ளதாவது:

''கேரள கல்லூரியில் நீட் தேர்வு அன்று ஆடையளைக் களையச் சொன்னதாக எழுந்த புகாரில் பின்வரும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர் மற்றும் கொல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அத்தகைய சம்பவம் நடந்தது எதையும் கண்டுபிடிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாணவி தேர்வை எழுதி உள்ளார். தேர்வின்போது, அதற்குப் பிறகும் யாரும் இதுதொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. தேசியத் தேர்வுகள் முகமைக்கு எந்த விதமான இ-மெயிலோ, புகார்க் கடிதமோ வரவில்லை.

தேசியத் தேர்வுகள் முகமையின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, மாணவியின் பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக செயல்பாடை என்டிஏ அனுமதிக்கவில்லை.

ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள், தேர்வு முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யவே கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் தேர்வர்களை சோதனை செய்து, பாலின/ மத/ கலாச்சார / பிராந்திய உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல''.

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது
Post a Comment (0)
Previous Post Next Post