சுட்டதெல்லாம் ‘தங்கம்’... துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய நடிகர் அஜித்

47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பதோடு மட்டுமின்றி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். அந்த வகையில் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்ற 47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் அஜித்தும் கலந்துகொண்டார். அவர் செண்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு மற்றும் ஐ.எஸ்.எஸ்.எப்பிற்கான ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றார். இதுதவிர 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 6 பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கான பரிசளிப்பு விழா கடந்த ஜூலை 28-ந் தேதி நடைபெற்றது. ஆனால் அஜித் அதில் பங்கேற்கவில்லை. ஏனெனில் அதற்கு முந்தைய தினம் அஜித்தை பார்க்க திருச்சி ரைபிள் கிளப் வாயிலில் ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர்.

மறுதினமும் இருந்தால் ரசிகர்கள் பெருமளவில் குவிந்து விடுவார்கள் என்பதனால் ஜூலை 27-ந் தேதி இரவே நடிகர் அஜித், திருச்சியில் இருந்து சென்னை கிளம்பி வந்துவிட்டார். ஜூலை 27-ந் தேதி மாலை திருச்சி ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் தனது ரசிகர்களை சந்தித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Post a Comment (0)
Previous Post Next Post