ஒரு தரப்பினருக்கு மட்டும் மும்மொழி கொள்கை: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு

தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருதை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக அவர்களின் தாய்மொழியை கற்கும் முறை, தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் ஒரு தரப்பினருக்கு, மும்மொழி கொள்கை அமலில் இருப்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருப்ப மொழி தேர்வு

தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட, பள்ளி ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவதாக விருப்ப மொழி தேர்வும் நடத்தப்படும் என்று பட்டியலிடப் பட்டது. இதனால், மும்மொழி கொள்கை மறைமுகமாக அமலாவது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழி கொள்கையை மாற்றி, மும்மொழி கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழக அரசு தங்களின் மொழி கொள்கையை, பல்வேறு கால கட்டங்களில் தெளிவுபடுத்தி வருகிறது. தாய்மொழியான தமிழ், உலகின் இணைப்பு மொழியாகிய ஆங்கிலம் என, இருமொழி கொள்கை மட்டுமே, வழக்கத்தில் இருந்து வருகிறது. இருமொழி கொள்கை மட்டுமே தொடரும். இருமொழி கொள்கை தமிழக அரசின், தமிழ் மொழி கற்கும் - 2006ம் ஆண்டு சட்டப்படி, ஒவ்வொரு மாணவரும், 10ம் வகுப்பு வரை, தமிழ் மொழியை கட்டாய பாடமாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுங்கு, கன்னடம்,மலையாளம், உருது மாணவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்களின் தாய்மொழியையும் விருப்ப பாடமாக தேர்வு செய்து எழுதும் முறை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே, தமிழக அரசின் தெளிவுபடுத்தப்பட்ட மொழி பாட கொள்கை குறித்து, மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழக பாடத்திட்டத்தின்படி இரு மொழிகளை மட்டுமே படிக்க முடியும்.

கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தவர்கள் மற்றும் உருது மொழி பேசுவோர், தமிழக அரசின் மொழி கொள்கைப்படி, மூன்று மொழிகளை படிக்க முடியும் என்று, அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது, தமிழர்களுக்கு இருமொழி கொள்கையும், மற்ற அண்டை மாநிலத்தவருக்கு மும்மொழி கொள்கையும் அமலில் உள்ளது தெளிவாகி உள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post