பொதுத்தேர்வில் அதிக மார்க் வாங்குவது எப்படி?



 திருப்புதல் தேர்வில் கடினமாக உணர்ந்த கேள்விகளை குறித்துக்கொண்டு அப்பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வு நிறைவு பெற்றுள்ளது. பள்ளிகளில் இறுதிகட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொதுத்தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையில் நடக்கவுள்ளன. 


பாடங்கள் நடத்தப்பட்ட கால அளவும் குறைவு என்பதால், போதுமான பயிற்சி இன்றி மாணவர்கள், பெற்றோர் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண்பது குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் கேட்டோம்.


அவர் அளித்த &'டிப்ஸ்&' இதோ:


சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை. மத்திய, மாநில பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில், கேள்விகள் தரமானதாகவே இருக்கும் என்பதால் கவனத்துடன் படிக்க வேண்டும்.


இரண்டு மாதங்களுக்கு டி.வி., போன் போன்ற பொழுதுபோக்கில் நேரத்தை விரயமாக்காமல் திட்டமிட்டு படிக்க வேண்டும்.


பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து, மட்டுமே கேள்விகள் வரும் என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை.


வீடுகளில் பிள்ளைகள் படிக்க பெற்றோர் அமைதியான கற்றல் சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 


இதுவரை நடந்த இரண்டு திருப்புதல் தேர்வுகளில், &'சாய்ஸ்&' அடிப்படையில் விட்ட பகுதிகளை, கூடுதல் கவனமுடன் படிக்க வேண்டும். மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.


பொறியியல், மருத்துவம் செல்ல உள்ள மாணவர்கள், கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்களை இணையதளத்தில் பார்த்து, எத்தனை மதிப்பெண் எடுத்தால், எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும் என தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.


பொறியியல் படிப்பில் சேரவுள்ள மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும், மருத்துவம் படிப்பில் சேரவுள்ளவர்கள் பயாலஜி, வேதியியல், இயற்பியல் பாடங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.


தேர்வுகளை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. குளிர் காலம் முடிந்து கோடை துவங்குவதால் உடல் பாதிப்புகள் ஏற்படும், உரிய உணவு பழக்கவழக்கங்களை கையாள வேண்டும். கட்டாயம் ஆறு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். நீட் தேர்வுக்கு என்.சி.இ.ஆர்.டி., கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை முழுமையாக படித்தாலே போதுமானது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment (0)
Previous Post Next Post