18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 150க்கும் மேற்பட்டோரிடம் தலா ரூ.10 லட்சம் வசூல் வேட்டை பெரம்பலுார்,ஏப்.22- பெரம்பலுார் மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 150க்கும் மேற்பட்டோரிடம் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலுார் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில், 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதை நிரப்ப 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 30 வயது உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு, சுமார் 400 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதற்கான இன்டர்வியூ கால்நடை பராமரிப்புத்துறை பெரம்பலுார் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று ஏப்., 22 வரை நடக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தி.மு.க., எம்.எல்.ஏ., ஆளும் கட்சியின் மாவட்ட செயலர், ஒன்றிய செயலர், மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர், எம்.எல்.ஏ. எம்.பி., உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட தங்கள் பகுதியை சேர்ந்த தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை நேரில் அணுகி, தங்களுக்கு வேலை வாங்கித் தர கோரிக்கை விடுத்து விடுகின்றனர். இவர்களிடம், ஆளும் கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இப்பணிக்கு 10 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொகை விண்ணப்பதாரர் மற்றும் நிர்வாகிகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. 18 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆளும் கட்சியினர் சுமார் 150க்கும் மேற்பட்டோரிடம் தலா 10 லட்சம் ரூபாயை வேலை வாங்கித் தருவதாக அவர்களுக்குக் உத்தரவாதம் கொடுத்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் வேலை கிடைத்தால் போதும் என 10 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்து வேலை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியினரும் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்