பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வேலூரில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடந்தது.

உலக தண்ணீர் தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தண்ணீர் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ‘நிலத்தடி நீர் அறிந்தும், அறியாததும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்ட விழிப்புணர்வு பேரணி வேலூரில் நேற்று நடந்தது. வேலூர் காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணி காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம், தெற்கு காவல் நிலையம், வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக பூங்காவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மரக்கன்றை நட்டு வைத்து நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர் மலைகளில் ஒரு சில மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர் என்று புகார்கள் வருகின்றன. அங்குள்ள பொதுமக்கள் சிலர், வெயிலில் சருகுகள் காய்ந்து அதனால் தீப்பிடிக்கிறது என்றும், சமூக விரோதிகள் வேண்டுமென்றே தீ வைத்து விட்டு செல்வதாக சிலரும் கூறுகின்றனர். தற்போது மழை பெய்துள்ளதால் ஒரு வாரத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு வனத்துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதேபோல் வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர், மூத்த பேராசிரியர் மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். விலங்கியல்துறை தலைவர் கேத்தரீன் மற்றும் பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மனித சங்கிலியில் பங்கேற்றனர். மனித சங்கிலியில் நிலத்தடி நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் பிடித்திருந்தனர்.

வேலூர் மாநகராட்சிக்கு 63 எம்எல்டி நீர் கிடைக்கும்

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘ஒகேனக்கல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வேலூர் மாநகராட்சிக்கு 63 எம்எல்டி தண்ணீர் வருகிறது. தற்போது ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பழுது காரணமாக 55 எம்எல்டி மட்டுமே கிடைக்கிறது. இப்பழுது சரியாகி விரைவில் முழுமையாக 63 எம்எல்டி நீரும் கிடைக்கும். தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் சமாளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயனற்ற போர்வெல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலாற்றில் 2 தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிலஆர்ஜிதம் போன்ற பணிகள் ஏதும் இல்லாததால் விரைவில் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post