புதிய அரசு கலைக் கல்லுாரி பட்டியல் - கிராமப்புற மாணவ மாணவியர் ஏமாற்றம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசு கலைக் கல்லுாரிக்கான அரசாணை பட்டியலில், சேலம் மாவட்டம் வாழப்பாடி இடம் பெறாததால், 10 ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் இப்பகுதி கிராமப்புற மக்கள் மற்றும் மாணவ–மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள வாழப்பாடி பேரூராட்சி, சேலம் மாவட்டம் அருநுாற்றுமலை, கல்வராயன்மலை மற்றும் தருமபுரி மாவட்டம் சேலுார், வேலனுார், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று, இளங்கலை மற்றும் அறிவியல் பட்டம் பயில விரும்பும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ–மாணவியர், சேலம், ஆத்துார், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

இதனால், குறித்த நேரத்திற்கு கல்லுாரிக்குச் சென்று வீடு திரும்ப முடியாமலும், தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ–மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வாழப்பாடி பகுதி கிராமப்புறங்களில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவியரது பட்டம் படிக்கும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது. எனவே, வாழப்பாடி சுற்றுப்புற மாணவ–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 2013ல் நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது, வாழப்பாடிக்கு பிரசாரத்திற்கு வந்திருந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘ஏற்காடு தொகுதிக்குள்பட்ட வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியில் கல்லுாரி துவக்கப்படும்’ என்றார். ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதனையடுத்து, 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்கப்படுமென அதிமுக மற்றும் திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வாழப்பாடியில் கலைக் கல்லுாரி அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, எதிர் வரும் கல்வியாண்டில் வாழப்பாடியில் அரசு கலைக் கல்லுாரியை தொடங்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லுாரிகள் தொடங்கப்படுமென, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டதால், இதில் வாழப்பாடியும் ஒன்றாக இருக்குமென்ற நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அடுத்தாண்டு தொடங்கப்படவுள்ள அரசு கலைக் கல்லுாரிகளின் பட்டியல் குறித்த அரசாணையில், விருதுநகர் திருச்சுழி, கள்ளக்குறிச்சி திருக்கோவிலுார், ஈரோடு தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மானுார், திருப்பூர் தாராபுரம், தர்மபுரி ஏரியூர், புதுக்கோட்டை ஆலங்குடி, வேலுார் சேர்க்காடு, திருவாரூர் கூத்தாநல்லுார் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் வாழப்பாடி இடம் பெறாததால் இப்பகுதி கிராமப்புற பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, எதிர் வரும் கல்வியாண்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
Post a Comment (0)
Previous Post Next Post