‛‛பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க; போலீசில் புகார் அளித்த 1ம் வகுப்பு மாணவன்

ஆந்திராவில் 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக கூறி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முறையிட்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த சிறுவன் ஹனுமந்த். அதே ஊரில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று (நவ.,25) அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில மாணவர்களுடன் வந்த ஹனுமந்த், அதில் ஒரு மாணவன் மீது பென்சிலை திருடி விட்டான் என புகார் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த போலீசார், புகாரளித்த மாணவனை சமாதானம் செய்துவைத்து இருவரையும் கைகுலுக்க சொல்கிறார். கைகுலுக்கியும் சமாதானம் ஆகாத ஹனுமந்த், 'என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' எனப் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினான். அதற்கு வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமின் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய நேரிடும் எனப் போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து, நான் அவனுடைய பெற்றோரிடம் இது பற்றி கூறுகிறேன் என ஹனுமந்த் தெரிவித்தான். சிரிப்பை அடக்க முடியாத போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 1ம் வகுப்பு மாணவனின் இந்த செயல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post