தற்கொலை எண்ணம் தடுக்க கல்வியாளர்களின் அறிவுரை

மருத்துவராக நினைக்கும் மாணவர்களுக்கு, மனோதிடம் அதிகமிருக்க வேண்டும். 'நீட்' தேர்வுக்கு முன்பும், பின்பும் தொடரும் தற்கொலை மரணங்களை தடுக்க வேண்டிய சமூக பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருப்பதாக, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில், 2017ம் ஆண்டு முதல், மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வை (நீட்), மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியானதில் இருந்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், தேர்வுக்கு முன்பும், பின்பும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. நடப்பாண்டில், நீட் தேர்வுக்கு முன், சேலம் மாவட்டம், கூழையூரை சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதிய பிறகு, கட்-ஆப் மதிப்பெண் குறைந்துவிடுமே என்ற அழுத்தத்தில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கனிமொழி, நேற்று தற்கொலை செய்து கொண்டது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கொட்டி கிடக்குது வாய்ப்புகள்


மருத்துவ படிப்புகளில் சொற்ப இடங்களுக்கு, கடுமையான போட்டி நிலவுகிறது. பள்ளி அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். தங்களின் 25 வயது வரை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், ஒருமுறைக்கு மேல், நீட் தேர்வு எழுதியோரே, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 70 சதவீத இடங்களில் சேருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி துறையில், எக்கச்சக்க படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் கொட்டி கிடக்கின்றன. மருத்துவம் தவிர மற்ற படிப்புகளை இம்மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது, பெற்றோர், ஆசிரியர்களின் கடமை.


- ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர். வீழ்ச்சிக்கு அல்ல கனவு!


பிளஸ் 2வில், கோச்சிங் சென்டர்களில் சேர்த்து, அதிக அழுத்தம் தருவது அதிகரித்துள்ளது. பள்ளிப் படிப்பு முடித்து, முழு நேரமாக, 'நீட்' தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பெற்றோர் அதிகம் சிரமப்படுவதாகவும், அதிக பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் நினைத்து, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகின்றனர். இதனால் தான், ரிசல்ட் வெளியாகும் வரை, காத்திருக்க முடிவதில்லை. பெற்றோர் தான் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கவனித்து, அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும், மாற்று படிப்பு குறித்து அறிமுகம் செய்து உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்காக தான், கனவுகளும், லட்சியங்களும் அமைய வேண்டுமே தவிர வீழ்ச்சிக்கு அல்ல. - அருள்வடிவு, உளவியல் ஆலோசகர்.


ஏன் இந்த அவசரம்?


மருத்துவராக நினைக்கும் மாணவர்களுக்கு, மனோதிடம் அதிகமிருக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன்பும், ரிசல்ட் வெளியாவதற்குள்ளும், ஏன் இந்த அவசரம், படபடப்பு என்ற கேள்வி எழுகிறது. மருத்துவ படிப்பை, சமூக பொருளாதார அங்கீகாரமாகவும், கவுரவமாகவும், படித்த பெற்றோரே நினைப்பதால், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தின் விளைவால் தான், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. நீட் நுழைவுத்தேர்வுக்கு மட்டுமல்ல, பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் போதும், இதே மனநிலையில் மாணவர்கள் இருப்பதை காண முடிகிறது. இதை தவிர்க்க, மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது அவசியம்.


-டாக்டர் ரவீந்திரநாத், பொது செயலாளர், சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
Post a Comment (0)
Previous Post Next Post