பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இவர்களில், கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், 2017ம் ஆண்டு ரூ.700-ம், கடைசியாக 2021ம் ஆண்டு ரூ. 2300-ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தோடு அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களை தற்போது வரை பணி நிரந்தரமும் செய்யவில்லை, சம்பளத்தையும் உயர்த்தவில்லை.

மேலும் பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post