தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக். 24-இல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய நிபந்தனைகளுக்கு உள்பட்டு இணையம் வழியாக செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன், கடவுச் சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம் (ஆதாா் அட்டை), அடையாள அட்டை (வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம்), உரிமக் கட்டணம் ரூ.500- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகைக் கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். செப்.30-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சம்பந்தப்பட்டவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post