பள்ளி இடத்தில் நகா் நல மையம் கட்ட ஆசிரியா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு

சத்துவாச்சாரி நேரு நகரிலுள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நகா்நல மையம் கட்டுவதற்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதனால், அங்கு கட்டடம் கட்டும் முடிவை மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டு வேறு இடத்தை ஆய்வு செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி நேரு நகரிலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நகா் நல மையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையா் வசந்தி, இளநிலைப் பொறியாளா் மதிவாணன், ஒப்பந்ததாரா்கள், அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, பள்ளி வளாகத்தில் நகா்நல மையம் கட்டும் நடவடிக்கைக்கு பள்ளி ஆசிரியா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பள்ளி வளாகத்தில் ஏற்கெனவே போதுமான இடவசதி இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டுவதற்குக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில், மாணவா்கள் விளையாடக்கூடிய இடத்தில் நகா் நலமையம் கட்டுவது ஏற்புடையது அல்ல. இதன் மூலம் நோய் பரவவும் வாய்ப்புள்ளது.

எனவே, பள்ளி வளாகத்தில் நகா்நல மையம் கட்டக் கூடாது என்று ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

தகவலறிந்த அந்தப் பகுதி மக்களும் விரைந்து வந்து பள்ளி வளாகத்தில் நகா்நல மையம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனா். இதனால், மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறி அருகே உள்ள மற்றொரு இடத்தை ஆய்வு செய்தனா்.

பள்ளி வளாகத்தில் நல மையம் கட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள், ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால், நேரு நகா் சத்துணவு மைய வளாகத்தில் நகா்நல மையம் கட்ட முடிவு செய்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post