பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய புதிய இயக்கம் - முதல்வர் முக ஸ்டாலின் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த கல்வியாண்டில் முழுவதுமாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு கற்றல் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது. இதற்காக தற்போது பள்ளிகள் முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டுள்ள போதிலும், முதல் 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை தவிர மற்ற இணைப்பு பயிற்சிக்கான வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் செப்டம்பர் 5ம் தேதி தமிழகத்தின் ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். அப்போது, சில நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். சில நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். இந்த நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த மரியாதைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு, மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் ஆசிரியர்களுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதை முதல்வர் நினைவு கூர்ந்தார். இவ்வுலகில், தன்னைவிட தன்னிடம் கற்றவர் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிற ஒரே இனம் ‘அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்’ இனம் மட்டுமே. அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் – குறிப்பாக Spoken English வகுப்புகள் நடத்த வேண்டும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும்பொழுது அதில், மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 2021-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழ்நாடு அரசு ரூ.32,599.54 கோடி ஒதுக்கியுள்ளது. தனி ஒரு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகபட்சத் தொகை இதுவாகும். கரோனா பெருந்தொற்று காலத்தில் உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பலர் ‘வீடுதேடிக் கல்வி வழங்குதல்’என்ற கொள்கையோடு மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பித்தீர்கள். இதுபோன்ற சிறப்பு முயற்சியை அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்துச்சென்று பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய அரசு ஒரு இயக்கத்தைத் தொடங்க இருக்கிறது. இந்த கலந்துரையாடலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment (0)
Previous Post Next Post