அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது 32-ஆக உயா்வு

அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது வரம்பை 32-ஆக உயா்த்தி தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டது.


சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளா் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயா்த்தப்படும் என அறிவித்திருந்தாா்.


அதன்படி அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பை 30-லிருந்து 32 ஆக உயா்த்தி தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.


கருணை அடிப்படை பணி நியமன வயது உச்ச வரம்பில் எந்தவித மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக அனைத்துத் துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post