10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - 3,552 காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்பட 3,552 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேரடி தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக்காவல் படைகளில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கும் இந்தாண்டு நேரடி தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளுக்கு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்களில், மாவட்ட /மாநகர ஆயுதப்படையில், 654 இடங்கள், சிறைக் காவலர் பிரிவில் 8 இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். *வயது வரம்பு :*

ஜூலை 1ம் தேதி அன்று, அனைத்து விண்ணப்பதாரர்களும், குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் எனில் அதிகபட்சம் 28 வயதிற்கு மேற்படாதவராகவும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் எனில் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் 31 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 37 வயதிற்கு மேற்படாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 47 வயதிற்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நிலை :

எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்டம், விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வில், தமிழ் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், முதன்மை எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது.

150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வினாக்கள் அடிப்படையில் எழுத்துத்தேர்வு இருக்கும்.

ஊதிய விகிதம் : ரூ.18,200 - 67,100

*இணையவழி விண்ணப்பம் :*

விண்ணப்பதாரர்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். *தேர்வுக்கட்டணம் :*

விண்ணப்பதாரர்கள் ரூ.250/- தேர்வுக் கட்டணத்தை இணையவழியிலோ, இணையமில்லா வழியில் எஸ்.பி.ஐ வங்கியின் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம்.

*சிறப்பு ஒதுக்கீடுகள்:*

மொத்த காலிப்பணியிடங்களில் விளையாட்டு பிரிவினருக்கு 10 சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீதமும், ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 3 சதவீதம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு https://tnusrb.tn.gov.in/
Post a Comment (0)
Previous Post Next Post