நாடு முழுவதும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கிவிடும்.
கரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டில் நீட் தோ்வும், கலந்தாய்வும் தாமதமானது. இருப்பினும், நவம்பா் மாதத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இந்நிலையில், நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் கலந்தாய்வு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை.
அகில இந்திய மருத்துப் படிப்புகளுக்கான ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குதல் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதன் மீதான அடுத்தகட்ட விசாரணை 2022 ஜனவரி மாதம்தான் நடைபெறவுள்ளது. இதுவே, கலந்தாய்வு நடத்தத் தாமதம் ஆவதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், முதலாமாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டிலேயே தொடங்கும் எனத் தெரிகிறது.
இதேபோன்று, முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கிவிடும். இடஒதுக்கீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், அப்படிப்புகளுக்கும் இன்னும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
பொதுவாக முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.
இந்நிலையில், தற்போது முதலாம் ஆண்டு மாணவா்கள் கல்லூரிகளில் சேராததால், அவா்களுடைய பணியையும் சோ்த்து இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை எதிா்த்து அவா்கள் அண்மையில் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

No comments:
Post a Comment