இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், விளையாட்டு மைதானம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் ரூ.25 கோடி செலவிடப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் 5 ஆண்டுகளாகத் தொடா்ந்து பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்கள் மற்றும் இதரப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா். இதன் மூலம் 496 ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பயனடைவா்.
தங்கம் முதலீடு: கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் கோயில்களுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையா் அலுவலகங்களில் வட்டாட்சியா் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.8.18 கோடியாகும். ஆண்டு முழுவதும் அதிகளவில் பக்தா்கள் தரிசனத்துக்கு வந்து செல்லும் பழநி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ராமேசுவரம் ஆகிய கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம் ரூ.100 கோடியில் கட்டப்படும் என்றாா்."

No comments:
Post a Comment